feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count
Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

எங்கிருந்தோ ஒரு மழை வந்தது

Labels:

இடியோசை கேட்கிலயோ?

மழையில் நடப்பது என்பது எனக்கு பிடித்தமான ஒன்று. சமீபத்தில் இடியோசையுடன் கூடி மழை சென்றவாரம். எடின்பரோவில் அவ்வளவாக மின்னலோ இடியுடன் கூடிய மழையோ கிடையாது. பலருக்கு மின்னலை பார்க்கவே முடியவில்லையே என்ற வருத்தமும் கூட. வழக்கத்தைவிட இந்த வருட வசந்த காலத்தில் (மார்ச்-மே) மழை கம்மி. பனிக்காலம் முடிந்தவுடன் இங்குள்ள செர்ரி ப்ளாசம் (Cherry Blossom) மரங்கள் இலையே இல்லாமல் பூத்து தள்ளிவிடும் பார்க்கவே மிக ரம்மியமாக இருக்கும். செர்ரி பழத்துக்கும் இந்த செர்ரி ப்ளாசம் மரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது வேறு வகை மரம் இது வேறு.

பல்கலைகழகத்துக்கு நடந்து செல்லும் வழியெங்கும் இந்த மரங்கள், வித விதமான வர்ணங்களில்..








நடந்துகொண்டே செல் காமிராவில் பிடித்ததால் அவ்வளவு சிறப்பாக வரவில்லை ஆயினும் அந்த அழகு காட்சியில் புரிபடும் என்று நினைக்கிறேன். வழக்கமாக பெஃபரவரி இறுதியில் பூத்துவிடும் இந்த மரங்கள் மார்ச் இறுதி தொடங்கி ஏப்ரலில்தான் பூக்கத் தொடங்கின. இப்படி பூக்கும் மரங்கள் கடந்து போன பனிக்காலம் எப்படி இருந்தது என்பதையோ அல்லது வர இருக்கும் கோடை எப்படி இருக்கக்கூடும் என்பதையோ எடுத்து கூறுவது போல் இருக்கிறது. அதனால்தான் இங்குள்ள மக்கள், இப்படி நடந்தால் அந்த வருடம் கோடை மிகவும் நன்றாக இருக்கும் என்ற ஒரு பழைய நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது மிகச் சரி என்பது போல கோலாகலமாக மழையே இல்லாத வெய்யிலோ வெய்யில் காயும் கோடை தொடங்கியுள்ளது.

நியுசியிலும் பனிக்காலம் முடிந்த பின் வச்ந்த காலத்தில் பூக்கும் பொஹுட்டுக்காவா மரங்களும் பார்க்க அழகாக இருக்கும்.





2007ல் நம்ம ஊருக்கு(தில்லி தொடங்கி, மதுரை வரை) போனபோது மரங்கள் இல்லாத பட்டினம் எங்கும், மக்கள், கட்டிடங்கள், கட்டிடங்கள், பின்பு மரங்களே இல்லாத வெளிகள். முன்பெல்லாம் நம்ம ஊரிலும் பூ பூக்கும் மரங்கள் இருந்தது. உதாரணத்துக்கு Flame or Fire of the forest என்று சொல்லப்படும் சிகப்பு வர்ணத்தில் பூக்கும் மரங்கள் இந்த செர்ரி மற்றும் பொஹுட்டுக்கு இணையான அழகு உண்டு.7% GDPயை நோக்கிய அசுர வளர்ச்சியில் இந்த மரங்கள் எல்லாம் காணமலே போய்விட்டன.



கிணற்றில் நீர் இறைத்து குளித்த காலம்

Labels:

கிணற்றில் நீர் இறைத்து குளிப்பது என்பது தனி இன்பம் தான். அது ஒரு கனாக்காலம் மாதிரி ஆகிவிட்டது.அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு கிணறு என்பது சாதாரணம். முதலில் தென்னமட்டை திரி கயிறுதான் இருந்தது. பத்து வாளி இறைப்பதற்குள் கையை பதம் பார்த்துவிடும். இருந்தாலும் 20-30அடி ஆழத்தில் தண்ணி இருக்குமாதலால் அது சாத்தியம். பின்பு லாரி டயரை மெல்லிதாக ஒரு அங்குலம் அகலத்துக்கு நறுக்கிய கயிறு பிரபலமானது. யோசித்து பாருங்கள் தேய்ந்து போன லாரி டயரை ரீ-ட்ரட் செய்து அதுவும் தேய்ந்த பின்னரே இந்த மாதிரி கயிறு உரிக்க வரும். ரிசைக்கிலில் லாரி டயருக்கு இவ்வளவு உபயோகங்கள்.

துண்டை கட்டிக்கொண்டு, சத்தமாக ஒரு பாட்டையும் பாடிக்கொண்டு, இறைத்து இறைத்து தலையில் ஜோவென்று கொட்டிக்கொண்டு குளிப்பது மிக மிக ஆனந்தமான கணங்கள். சில சமயம் பறவைகள் கூட்டமாக தண்ணீரில் கும்மாளமிடுமே அது மாதிரி. ஒரு பத்து வாளி முடிந்த பின் லைஃபாயோ இல்லை காதிகிராம் குடீர் சோப்போ (என் அண்ணன் சொல்லுவான் குடீர் சோப், தேயோ தேய் என்று தேய்தால் நன்றாக நுரை வரும், உங்கள் வாயில் என) போட்ட பின் மறுபடி ஒரு பத்து வாளி. குளிச்சா இப்படில்ல குளிக்கணும். இப்ப முடிதா என்ன?

அப்ப மதுரல பவர்க்ட் ஆகும்(இப்பவும்தான்) அதுவும் மதியானம் நல்ல உச்சி வெய்யிலின்போது. கோடை விடுமுறை போது என் பாட்டி மதுரைக்கு வருவார்கள். இந்த மாதிரி பவர்கட் ஆகி வியர்த்துகொட்டிவிடும். நான் விளையாடிவிட்டு ஒரு மூன்று மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து குளிக்க செல்வேன். அப்போது பாட்டி வெக்கை அதிகமா இருக்குடா ஒரு ரெண்டு வாளி ஜில்லுன்னு இறைச்சு ஊத்துன்னு சொல்லுவாங்க. சரி வான்னு ரெண்டு என்ன, இந்தா இன்னும் ஒரு வாளி, இன்னும் ஒரு வாளின்னு இறைச்சு ஊத்திக்கிட்டே இருப்பேன். மிக மிக சந்தோஷமானது அது.

1982ல் மாடக்குளம் கண்மாய் உடைந்து வந்த வெள்ளத்தில் என் வீட்டில் இருந்த கிணற்றில் சிமிண்ட் உறைகள் தாறுமாறாக சரிந்துவிட்டது. அதை அப்படியே மூடி விட்டு பக்கதில் புதிதாக இன்னுமொரு கிணறு வெட்டினார்கள். ஒரு வருடத்திலேயே தண்ணீர் மட்டம், நான் கிணற்று உள்ளேயே இறங்கி கப்பு வைத்து வாளியில் தண்ணீர் ரொப்பி இறைக்குமளவுகு கீழே போய்விட்டது அதனால் இன்னும் ஆழமாக தோண்டவேண்டி வந்தது. பிறகு அதுவும் கீழே போனதால், ஒரு நல்ல முகூர்த்த நாளில், நல்லிரவில் கம்ப்ரசர் வைத்து 150 அடி ஆழத்துக்கு ஆழ்துளை போட்டு, மோட்டார் போட்டு ஸ்ட்ராவில் இளநி உறிஞ்சுவது போல சுலபமாக 5 நிமிடத்தில் 1000 வாளி் ரொப்பிவிடலாம் என்றாகிப் போனது. ஆக இப்போது கிணறும் இல்லை, பாட்டியும் இல்லை.

தேவைகள் என சேர்த்துக்கொண்டதால் என்னவெல்லாம் இழந்து விட்டோம்? இறைத்து குளித்தால் நல்ல தேக பயிர்சி, முதுகு வலி எல்லாம் வந்து கஷ்டப்படவேண்டாம். நல்ல பைசப்ஸ் கூட வரக்கூடும். தேவைக்கு அதிகமாக கண்டிப்பாக தண்ணீரை வீணடிக்க மாட்டோம். தண்ணீர் மட்டமும் கீழேஏஏஏ போயிருக்காது. ஆனாலும் யார் யோசிக்கிறார்கள் இதைப் பற்றியெல்லாம்?



புதிய முகம்

Labels: ,

இப்படி ஒரு முகம்



வேண்டுமா? லிஜ்ஜட் பாப்பட் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். 700-1000W மைக்ரோவேவ் அவசியம் தேவை. பாப்படில் சிறிதே சிறிது தண்ணீரை இரண்டு பக்கமும் தடவி மைக்ரோவேவில் வைக்கவும். பின்பு, ஹைபவரை தேர்ந்தெடுத்துக்கொண்டு, 1 நிமிடம் நேரத்தை தேர்ந்தெடுத்துவிட்டு, அப்படியே டிவி பார்க்க சென்றுவிட வேண்டும். சற்று புகைகிற நாற்றம் மூக்கை துளைக்கும் போது மைக்ரோவேவை நிறுத்தினால் மேற்கண்ட முகம் கிடைக்கும். அது எம்ஜியாராகவுக் இருக்கலாம் இல்லை The Dark Knight ஜோக்கர் மாதிரியும் வரலாம். அப்படியே டிவியில் ஒன்றிப்போய்விட்டீர்கள் என்றால், தீபாவளி மெர்குரியும் பார்க்கலாம்,அதற்கற்புறம் என்ன நடக்கும் என்பதை அவரவர் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.



மனித மிருகம் மட்டுமே நகம் கடிக்கும்

Labels:



காலையில் பஸ் பிடிப்பதற்காக பஸ் ஸ்டாப்பில் நிற்கிறேன். மழை தூறிக்கொண்டிருந்தது. மிதமான குளிர். 9.12க்கு வரவேண்டிய பஸ் 9.35 ஆகியும் வரவில்லை. எனக்கு முன்னால் நின்ற பெண் நகம் கடிக்க துவங்கியிருந்தாள்.
நம்மை அறியாமலேயே இயல்பாய் நடக்கும் விஷயம். கல்லூரியில் படிக்கும் போது என் நண்பன் டென்ஷனாகிவிட்டால் தன் கைவிரல் பத்தையும் கடித்து நகமில்லாது போக பக்கத்திலிருக்கு என் விரல்களை கேட்பான். ஆக பலருக்கு நகம் கடிப்பது (onychophagia) என்பது ஒரு டென்ஷன் வடிகால் மாதிரி. சிறு வயதில் கை சூப்பும் வழக்கம் இருக்கும் ஆனால் ஒரு 3-5 வயதுக்குள் நிறுத்தி விடுவோம். ஆனால் நகம் கடிப்பது பலருக்கு நீண்டு கொண்டே இருக்கும்.

கிரிகெட் கடைசி பத்து ஒவர் பாக்கும் பொழுதோ இல்லை சினிமா க்ளைமாக்ஸ், வகுப்பில் தன்னை கேள்வி கேட்டுவிடுவாரோ இல்லை என்னை ஏன் கேட்க்கவில்லை என்றோ, நகத்தை கடித்துக்கொண்டிருப்பார்கள். நகம் கடிக்கிறேன் என்பதே தெரியாமல் இந்த பழக்கம் இருக்கும்.

இந்த நகம் கடிக்ற பழக்கத்த Pablo Picasso இப்படி சொல்லிருக்காரு: I draw like other people bite their nails; எப்படி இருக்கு?

நான் சிறுவனாக இருந்த போது யாரு நகம் வெட்டி விட்டார்கள் என்று யோசித்த போது அப்படி யாரும் வெட்டி விட்டதேயில்லை என்கிற விஷயம் சற்று ஆச்சர்யத்தை கொடுத்தது. பல்லாலே கடித்துதான் துப்பியிருக்கவேண்டும். சற்று வளர்ந்த பின் பர்மா பஜாரில் வாங்கிய ஜப்பான் தயாரிப்பு நகம் வெட்டி வைத்து வெட்டியது ஞாபகமிருக்கிறது. நீல கலரில் ப்ளாஸ்டிக்கில் பூ வேலைப்பாட்டுடன் வெட்டிய பின் ராவி நகத்தை சமன் செய்ய ரம்பத்துடன் பள பள வென்றிருக்கும். பல காலம் அதிலேயே வெட்டிய ஞாபகமிருக்கிறது. என் அண்ணனும் அதில்தான் வெட்டுவான், ஆனால் என் அக்காவுக்கு தேவையில்லை கடித்தே துப்பி விடுவாள்.

ஆனால் இப்போது பாருங்கள் என் பையனுக்கு நகம் வெட்டுவது என்பது எனக்கு மிகவும் சந்தோஷமான ஒரு விஷயம். ஆனால் அவனோ ஏதோ பெரிய சர்ஜரி மாதிரி ஆர்பாட்டம் செய்துவிட்டுதான் ஒரு வழியாக கையை நீட்டுவான். அதிலும் பல கண்டீஷன்களுடன். கையை தண்ணீரில் நனைத்தால் வலிக்காமல்(!!?) இருக்குமாம். (இது ஒரு சாக்கு, அப்படியே குழாயை திறந்து தண்ணீரில் விளையாடுவதற்கு நல்ல சந்தர்ப்பம்) முதலில் சுட்டு விரலில்தான் ஆரம்பிக்க வேண்டும். சுண்டிவிரலில் வெட்ட கூடாது. வெட்டிய பின் தனியாக இருக்கும் ரம்பத்தால் தானே ராவ வேண்டும். இத்தனையும் இருந்தாலும் அந்த பிஞ்சுக் கரங்களை பிடித்து ஏதாவது கதை சொல்லிக்கொண்டே வெட்டி விடுவது என்பது ஒரு வாத்சல்யமான தருனம். இப்போது வளந்து விட்டான் தானே வெட்டி கொள்கிறான். சில நேரம் அவன் வெட்டுவதை பார்க்கும் போது, படகை செதுக்கிய தச்சன் அது உருவாகி வாழ்கை என்னும் கடலில் செல்ல தயாராவதை கரையில் நின்று பார்பது போல், போது கடந்து போன அந்த சந்தோஷ தருனங்கள் நினைவில் வந்து போகும்.



நடந்தவை நடப்பவை-6

Labels: ,

நீச்சல் வகுப்பு இருப்பதால் சனிக்கிழமை காலை கஷ்டப்பட்டு எழுந்து ப்ரின்ஸஸ் தெருவில் பஸ் பிடிக்க செல்லும்போது விஸ்கி வாசம் காற்றில் மிதந்து வந்தது. வெள்ளி இரவு இந்த ஊர் மக்கள் ஏதோ திங்கள் கிழமை இருக்கிற எல்லா சரக்கையும் கடலில் கொட்டிவிடப்படும் என அரசாங்க ஆணை வந்தது போல் குடித்து தீர்த்து விடுவார்கள். அந்த போதையில் யாராவது பாட்டிலை ரோட்டில் கவிழ்த்து விட்டிருப்பான்(ள்) என நினைத்தால் வீட்டைவிட்டு வந்து வின்சென்ட் தெரு, ஹோவ் தெரு தாண்டி ஃப்ரெட்ரிக் தெருவந்து ப்ரின்ஸஸ் வரும் வரை எங்கும் அதே வாசம். எடின்பரோவில் வைக்கோல் சந்தை அருகே இருக்கும் காலடோனியன் வடிசாலை (distillery) ஞாபகம் வந்தது. நேத்து ராத்திரி ஊத்திக்கிட்ட சரக்கு ஞாபகமா இருக்க காலையில் காற்றில் மிதந்து வரும் விஸ்கி வாசம் இந்த ஊர் "குடி"மக்களுக்காகவே.

நீச்சல் குளம் இருக்குமிடம் தெரியாமல், ஒரு சின்ன போர்டு போட்டு இருந்தது. உள்ளே போனால் இரண்டு பாட்மிட்டன் கோர்ட் சைஸ்க்கு குளம் மிகவும் சுத்தமாக இருந்தது. போன இரண்டு வாரங்களாக வந்த ஆசான் லீவுல போனதால இந்த வாரம் மேரி என்ற புது டீச்சர். இரண்டொரு நிமிடங்களிலேயே இவர் குழந்தைகளுக்கான ஆசிரியை என தெரிந்து போனது:

நீ எங்க தங்கியிருக்கே?

எப்படி வந்தாய் பஸ்ஸுலயா? காருலயா?

இன்னிக்கி நல்ல மழ இல்லியா?


என இப்படி சம்பாஷனை போய்கொண்டிருந்தது, இறுதியில் இதெற்கெல்லாம் மகுடமாக வகுப்பு முடிய ஐந்து நிமிடம் இருந்த போது "சரி இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு உங்களுக்கு என்ன பன்ணனும்னு தோனுதோ அத பண்ணுங்க!!!" (do whatever you like) என்றாளே பார்க்கலாம். என் பையனை நீச்சல் வகுப்புக்கு அழைத்து சென்று அங்கு குழந்தைகளுக்கு வகுப்பு முடிவில் ஒரு ஐந்து நிமிடம் இப்படி சொல்லி விட்டுவிடுவார்கள் அது ஞாபகத்துக்கு வர என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

எனினும, எதையும் படிக்கனும் என வகுப்புக்கு வந்து விட்டால் வாத்தியாருக்கு நாம் எவ்வளவு வயதான போதும் குழந்தைகள் போல்தானோ என தோன்றியது.

மாலை மிக அருமையான வெய்யிலடித்ததால் வீட்டுக்கு அருகே இருக்கும் பொட்டானிக்கல் கார்டனை கண்டுபிடிக்கலாம் என நடக்க தொடங்கினேன். சில தூரம் வந்த பின் புகைபடக்கருவியை எடுத்து வந்திருக்கலாம் என்ற ஞானோதயம் கூடவே சோம்பேறித்தனமும் வந்ததால் சரி அடுத்த முறை பார்க்கலாம் என கார்டனுக்கு வந்து சேர்ந்தேன். நான் வந்த நேரம் மாலை 4.30 மணி. உள்ளே இருக்கும் கண்ணாடிவீட்டுக்கு வார இறுதி நாட்களில் மாலை 4 மணிக்கு மேல் அனுமதி இலவசம் என கேட்டுக்கு அருகே இருக்கும் போர்டு சொல்லியது. அஹா 3.50 பவுண்டு மிச்சம் என குதூகலமாக நடக்க தொடங்கினே.

உலகின் பல இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட மரங்கள், செடிகள். எல்லாவற்றுக்கும் அதன் பெயர் எந்த நாட்டை சேர்ந்தது என்ற குறிப்புகளுடன் மிக அழகாக வைத்திருக்கிறார்கள்.

காமிரா எடுத்து வரவில்லையென்றால் என்ன அதான் செல் காமிரா இருக்கிறதே என சில வற்றை க்ளிக்கினேன்.





இங்கு எடின்பரோவில் எங்கு பார்த்தாலும் பூத்திருக்கும் டஃபோடில்(daffodil), கான்சர் சொசைட்டியின் சின்னம்.



நடந்து நடந்து கண்ணாடிவீட்டுக்கு வந்தேன். ஏன் இதற்கு 3.50 பவுண்டுகள் என புரிந்தது. மிகப் பிரமாண்டம். கிட்டதட்ட நம்ம சிவாஜி "சஹானா பாடல் செட் மாதிரி". வெப்ப மண்டலம், மழைக்காடுகள், வரண்ட பகுதி, பாம் (palm) மரங்கள் என இந்த பூமி உருண்டையில் உள்ள அத்தனை சீதோஷ்ன நிலைகளையும் உள்ளடக்கிய பகுதிகள கொண்டது. கீழே உள்ள படம் மழைக்காட்டு பகுதியில் நுழைந்தபோது கண்ணாடியில் படியும் நீராவி எஃபெக்ட் மொபைலின் லென்சில் படிந்து அதனாலேயே அழகாக வந்த படம்.



வெப்ப மண்டல பகுதியில் ஒரு மூலையில் ஷோகேஸ் மாதிரி வைத்து இந்த மண்டலத்தில் விளையும் சில முக்கியமான் பொருட்களை வைத்திருந்தார்கள். வெல்லம், சோளம், கோதுமை, வாழை, மாம்பழம், எள்ளு.. என அப்படியே பார்த்தால் ஒரு அரிசி மூட்டை அதன் மேலே என்னவென்று பார்த்தால் நம்ம ஊரு MTR இன்ஸ்டன்ட் இட்லி மாவு பாக்கெட!! அட பரவாயில்லையே என் தோன்றியது.

மன்னிக்கவும் சற்று உள்ளடங்கியிருந்ததால் ஃபோகஸ் ஆகவில்லை.

எல்லாம் முடிந்து வெளியே வரும் நூழை வாயில் கேட்டுக்கு அருகே வந்த போது ஐந்தும் மூன்று வயதுமான் மகளையும் மகனையும் ப்டித்துக்கொண்டு ஒருவர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். அப்போது நான் கேட்ட சம்பாஷனை:

மகள்: "அவ்வளவுதானா டாடி?"

அப்பா: "ம் ஆச்சு. இப்போ சமத்தா இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தா காருக்கு போயி அப்புறம் வீட்டுக்கு போகலாம்."

மகள்: "ம் சரி. அந்த அணில் எவ்வளவு நல்லா இருந்தது? க்ளாஸ்ஹவுஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அம்மவோட இன்னொருதரம் வரலாமா?"

அப்பா: "ம் வரலாம். சரி இப்போ போகரதுக்கு முன்னாடி ஒரு வேல பாக்கியிருக்கு. இன்னிக்கு நம்மள ஃப்ரீயா உள்ள விட்டாங்க இல்லியா, ஆனா எவ்வளவு செலவு செஞ்சு நல்லா வெச்சிருக்காங்க அத பாராட்றா மாதிரி நீங்க இப்ப இந்த காச அங்க வெச்சிருக்கிற டொனேஷன் உண்டியல்ல போட்டுட்டு வாங்க", என கூறி இருவருக்கும் சில்லறைகளை கொடுத்து அவர்களும் போட்டு விட்ட வந்தனர்.

இன்று அனுமதி இலவசம் என்று எனக்கு பட்டது சிற்றின்பமாக தோன்றியது.

மேல் நாட்டவரிடம் குழந்தைகளை வளர்க்கும் சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது.