கடவுளும் கார்பனும்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
மேற்கண்ட இந்த திருவாதவூரர் என்கிற மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல், நான்கே வரிகளில் கூறுவது பரிணாம வளர்ச்சி தத்துவத்தை. மணிவாசகரின் காலம் எது என்பது இன்றும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. ஆனாலும் இதுவரை கிடைத்துள்ள சான்றுகள் மூலம் மாணிக்க வாசகர் வாழ்ந்த காலம் கி.பி. ஒன்பதான் நூற்றாண்டு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது 700-850 என்று வைத்துக்கொள்ளலாம். சரி இப்போது 2009க்கு வருவோம். இந்த் ஆண்டு,1809ல் பிறந்த Charles Darwinன் 200வது பிறந்த ஆண்டாகவும், 1859ல்அவர் வெளியிட்ட Origin of Speciesன் 150வது ஆண்டு பூர்த்தியானதையும் வேறு எங்கு கொண்டாடுகிறார்களோ இல்லயோ இங்கு இங்கிலாந்தில் இதற்காக சிறப்பு விழா, தொலைகாட்சி ஆவணப்படங்கள், வெளீயிடுகள் என கொண்டாடுகிறார்கள்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் பல மனிதனுடை வாழ்கையை மாற்றியிருந்தாலும், டார்வினின் இயற்கை தேர்வுத் தத்துவம் (Natural Selection) பல அரசியல் கொள்கைகள், இனவேறுபாடு காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் உயிர் பலிக்கும், ஆதாரமாக இருந்ததே அது இத்தனை வருடங்கள் தாண்டியும் இன்றும் அது முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலே நான்கே வரிகளில் மாணிக்கவாசகர் டார்வினுக்கு அயிரமாண்டுகள் முன்பே சொல்லிவிட்டுப் போனதுதான். ஆனால் என்ன திருவாதவூரர் தான் எழுதிய அந்த பாடலை நிரூபிப்பதற்காக, கப்பல் ஏறி தேசாந்திரமாக சென்று ஆயிரக்கணக்கில், இலைகளையும், பூச்சிகளையும், பறவைகளையும், ஏலும்புகளையும் 20 வருடமாக சேகரிக்கவில்லை என்பதே வித்யாசம். அறிவியலுக்கு தொட்டு, பார்த்து, உணரக் கூடிய அதாரங்கள் மிக அவசியம் அதை டார்வின் மிகவும் கஷ்டப்பட்டு சேகரித்தார். மாணிக்கவாசகரோ, ஆத்ம பூர்வமாக உணர்ந்ததால், நரியை பரியாக மாற்றி, ஆண்டவனையே பிட்டுக்கு மண் சுமக்க வைத்து, பின்பு எல்லோரும் பார்க்க ஈசனுள் மறைந்தார், என்பது சரித்திரம்.
இது சைவ சிந்தனை என்றால் வைணத்தில் பெரியாழவாரின் நான்காம்பத்து திருமொழியில் (பா:420)
தேவுடைய மீனமாய் ஆமையாய் ஏனமரி குறளும் ஆகி
மூ-உருவில் இராமனாய்க் கண்ணனாய்க் கற்கியாய் முடிப்பான் கோயில்
என்று இந்த பரிணாம வளர்ச்சியை திருமாலின் தசாவதாரமாக சொல்லுகிறது. முதலில் மீன், ஆமை, பன்றி, நர-சிங்கம் , குள்ள மனிதன், பல் வேறு நிலைப் பட்ட மனிதன் என்பதே அது. ஏதோ உண்மையைக் கண்டுணர்ந்த பண்டைய இந்தியர்கள் உருவகப் படுத்தி புனைந்த புராணங்கள் வெறும் கற்பனையானதா?
சிந்தனைக்கு:
Peter Stein said: "In the internet nobody know you are a dog"
George Orwell said: " All animal are equal but some animals are more equal than others"
Monday, March 23, 2009 | 0 Comments
கிணற்றில் நீர் இறைத்து குளித்த காலம்
கிணற்றில் நீர் இறைத்து குளிப்பது என்பது தனி இன்பம் தான். அது ஒரு கனாக்காலம் மாதிரி ஆகிவிட்டது.அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு கிணறு என்பது சாதாரணம். முதலில் தென்னமட்டை திரி கயிறுதான் இருந்தது. பத்து வாளி இறைப்பதற்குள் கையை பதம் பார்த்துவிடும். இருந்தாலும் 20-30அடி ஆழத்தில் தண்ணி இருக்குமாதலால் அது சாத்தியம். பின்பு லாரி டயரை மெல்லிதாக ஒரு அங்குலம் அகலத்துக்கு நறுக்கிய கயிறு பிரபலமானது. யோசித்து பாருங்கள் தேய்ந்து போன லாரி டயரை ரீ-ட்ரட் செய்து அதுவும் தேய்ந்த பின்னரே இந்த மாதிரி கயிறு உரிக்க வரும். ரிசைக்கிலில் லாரி டயருக்கு இவ்வளவு உபயோகங்கள்.
துண்டை கட்டிக்கொண்டு, சத்தமாக ஒரு பாட்டையும் பாடிக்கொண்டு, இறைத்து இறைத்து தலையில் ஜோவென்று கொட்டிக்கொண்டு குளிப்பது மிக மிக ஆனந்தமான கணங்கள். சில சமயம் பறவைகள் கூட்டமாக தண்ணீரில் கும்மாளமிடுமே அது மாதிரி. ஒரு பத்து வாளி முடிந்த பின் லைஃபாயோ இல்லை காதிகிராம் குடீர் சோப்போ (என் அண்ணன் சொல்லுவான் குடீர் சோப், தேயோ தேய் என்று தேய்தால் நன்றாக நுரை வரும், உங்கள் வாயில் என) போட்ட பின் மறுபடி ஒரு பத்து வாளி. குளிச்சா இப்படில்ல குளிக்கணும். இப்ப முடிதா என்ன?
அப்ப மதுரல பவர்க்ட் ஆகும்(இப்பவும்தான்) அதுவும் மதியானம் நல்ல உச்சி வெய்யிலின்போது. கோடை விடுமுறை போது என் பாட்டி மதுரைக்கு வருவார்கள். இந்த மாதிரி பவர்கட் ஆகி வியர்த்துகொட்டிவிடும். நான் விளையாடிவிட்டு ஒரு மூன்று மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து குளிக்க செல்வேன். அப்போது பாட்டி வெக்கை அதிகமா இருக்குடா ஒரு ரெண்டு வாளி ஜில்லுன்னு இறைச்சு ஊத்துன்னு சொல்லுவாங்க. சரி வான்னு ரெண்டு என்ன, இந்தா இன்னும் ஒரு வாளி, இன்னும் ஒரு வாளின்னு இறைச்சு ஊத்திக்கிட்டே இருப்பேன். மிக மிக சந்தோஷமானது அது.
1982ல் மாடக்குளம் கண்மாய் உடைந்து வந்த வெள்ளத்தில் என் வீட்டில் இருந்த கிணற்றில் சிமிண்ட் உறைகள் தாறுமாறாக சரிந்துவிட்டது. அதை அப்படியே மூடி விட்டு பக்கதில் புதிதாக இன்னுமொரு கிணறு வெட்டினார்கள். ஒரு வருடத்திலேயே தண்ணீர் மட்டம், நான் கிணற்று உள்ளேயே இறங்கி கப்பு வைத்து வாளியில் தண்ணீர் ரொப்பி இறைக்குமளவுகு கீழே போய்விட்டது அதனால் இன்னும் ஆழமாக தோண்டவேண்டி வந்தது. பிறகு அதுவும் கீழே போனதால், ஒரு நல்ல முகூர்த்த நாளில், நல்லிரவில் கம்ப்ரசர் வைத்து 150 அடி ஆழத்துக்கு ஆழ்துளை போட்டு, மோட்டார் போட்டு ஸ்ட்ராவில் இளநி உறிஞ்சுவது போல சுலபமாக 5 நிமிடத்தில் 1000 வாளி் ரொப்பிவிடலாம் என்றாகிப் போனது. ஆக இப்போது கிணறும் இல்லை, பாட்டியும் இல்லை.
தேவைகள் என சேர்த்துக்கொண்டதால் என்னவெல்லாம் இழந்து விட்டோம்? இறைத்து குளித்தால் நல்ல தேக பயிர்சி, முதுகு வலி எல்லாம் வந்து கஷ்டப்படவேண்டாம். நல்ல பைசப்ஸ் கூட வரக்கூடும். தேவைக்கு அதிகமாக கண்டிப்பாக தண்ணீரை வீணடிக்க மாட்டோம். தண்ணீர் மட்டமும் கீழேஏஏஏ போயிருக்காது. ஆனாலும் யார் யோசிக்கிறார்கள் இதைப் பற்றியெல்லாம்?
Monday, March 16, 2009 | 0 Comments